இந்திய ரயில்வே NewsSense
இந்தியா

இந்திய ரயில்வே : மது வாங்க ரயிலை நிறுத்திய இன்ஜின் டிரைவர் - என்னய்யா நடக்குது இங்க?

NewsSense Editorial Team

உலகம் தொடங்கி உள்ளூர் வரை பயணங்கள் இன்றியமையாதவைகளாகிவிட்டன. பெருநகரங்களில் தினமும் 30 - 40 கிலோமீட்டர் பயணித்து அலுவலகங்களுக்குச் சென்று வருவது எல்லாம் இந்திய நடுத்தர மக்களிடையே சர்வசாதாரணமாகிவிட்டது. இதில் நம் சென்னையும் அடக்கம்.

அதிலும் பெருநகர பயணத்தில், விரைவாகவும் ஓரளவுக்கு நிம்மதியாகவும் பயணிக்க உதவும் பயண முறைகளில் உள்ளூர் பெருநகர ரயில் சேவைகளுக்கு மிக முக்கிய இடமுண்டு.

அந்த ரயில்கள் ஒரு சில நிமிடம் தாமதமானாலே, மனிதர்கள் தங்கள் அலுவலகங்களுக்கோ, வீட்டுக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று சேர்வது பல நிமிடங்கள் தொடங்கி, சில சமயங்களில் மணி நேரக் கணக்கில் தாமதமாகிவிடும்.

எதார்த்தம் அப்படி இருக்க, இங்கு பீகார் மாநிலத்தில் ஒரு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த ரயிலின் ஓட்டுநர் மது அருந்துவதற்காக ரயிலை நடுவழியில் நிறுத்தியது தான் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது?

ரயில் எண் 05278 என்கிற உள்ளூர் ரயில், கடந்த திங்கட்கிழமை மாலை பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் - சஹர்சா நகரங்களுக்கு இடையில் திட்டப்படப் பயணிக்க வேண்டும்.

திங்கட்கிழமை மாலை சமஸ்திப்பூரிலிருந்து புறப்பட்ட ரயிலை இன்ஜின் ஓட்டுநர் கரம்வீர் பிரசாத் யாதவ் இயக்கினார். சமஸ்திபூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஹசன்பூர் என்கிற ரயில் நிலையத்தில் நின்றது. வழக்கம் போல கிராசிங்காக நிறுத்தப்பட்டிருக்கிறது போல எனப் பயணிகள் கருதினர்.

ஒரு சில நிமிடங்கள் கடந்தும் ரயில் புறப்படவில்லை, ரயில் போக்குவரத்தை நிர்வகிக்கும் அமைப்போ, ஏன் சமஸ்திபூர் - சஹர்சா ரயில் புறப்படவில்லை, அடுத்து ஒரு ராஜ்தானி ரயிலுக்கு வழிவிட வேண்டுமே எனப் பதற்றம் அதிகரித்தது.

பயணிகளும் கொந்தளிக்கத் தொடங்கிய பின், ஹசன்பூர் ஸ்டேஷன் மாஸ்டர் மனோஜ் குமார் செளத்ரி அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த ரிஷி ராஜ் குமார் என்கிற இன்ஜின் ஓட்டுநரை அழைத்து ரயில் பயணத்தைத் தொடரச் செய்துள்ளார்.

அதற்குள் காத்திருப்பு அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது, கடைசியில் அந்த காத்திருப்பு ஒரு மணி நேரமாகிவிட்டது.

ரயில்வே காவலர்கள் களத்தில் இறங்கி இன்ஜின் ஓட்டுநர் கரம்வீரைத் தேடிய போது, அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு ரயிலுக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. அம்மாநிலத்தில் மது விற்பது சட்ட விரோதம் என்பதால், இன்ஜின் ஓட்டுநருக்கு யார் மது விற்றார்கள் என்பது குறித்து போதிய விவரங்கள் கிடைக்கவில்லை.

சமஸ்திபூர் கோட்ட ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளாராம். விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் அலோக் அகர்வால்.

ஒரு கப் தேநீர்

கிட்டத்தட்ட இரு வார காலத்துக்குள், இதே பீகார் மாநிலத்தில், குவாலியர் - பரானி எக்ச்பிரஸ் ரயில் (எண் 11123) சிவான் ரயில் நிலையத்துக்கு அருகில், ஒரு சாலை கிராசிங் கேட்டில் ஒரு கப் தேநீருக்காக ரயிலை நிறுத்திய செய்தி இணைய தளம் முழுக்க வைரலானது நினைவுகூரத்தக்கது.

பொதுமக்களின் நேரம் அத்தனை மதிப்பற்றதா என்கிற கேள்வியைத்தான் அரசு அதிகாரிகளைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?