"தாலியைக் கழட்டுவது கணவனுக்கு வேதனையை உண்டாக்கும்" - சென்னை உயர் நீதிமன்றம் istock
தமிழ்நாடு

தாலி விவகாரம் : உண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - Fact Check

NewsSense Editorial Team

மனைவி தாலியைக் கழட்டுவது, கணவருக்கு எதிராக இழைக்கப்படும் உச்சகட்ட கொடூரமான செயல் என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதாக பல இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அல்லது விவாதிக்கப்பட்டு வருகிறது.

150 ஆண்டு கால பாரபரியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குமா..? என பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் உண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடவில்லை என Livelaw.in வலைதளத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

சி சிவகுமார் Vs ஏ ஶ்ரீவித்யா ஆகிய இரு தரப்பினருக்கு மத்தியிலான விவாகரத்து வழக்கில்தான் உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பு ஊடகங்களில் தவறாக வெளியாகியுள்ளது.

இவ்வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மனைவியாலோ அல்லது தன்னிச்சையாகவோ தாலி கழற்றப்பட்டால் அல்லது கழண்டு விழுந்தால் அது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று கூறவில்லை.

மாறாக "தாலி தன்னிச்சையாக கழண்டு விழுந்தால் அது மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று கருதமுடியாது" என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

சிவகுமார் தன் மனைவி ஶ்ரீவித்யாவை விவாகரத்து செய்ய குடும்ப நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். குடும்ப நீதிமன்றம் சிவகுமாரின் வழக்கை தள்ளுபடி செய்தது. சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய, அதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

இவ்வழக்கை நீதியரசர் வி எம் வேலுமணி மற்றும் நீதியரசர் எஸ் சவுந்தர் அமர்வு விசாரித்தது. தன் மனைவி ஶ்ரீவித்யா, தன்னை சந்தேகப்படுவதாகவும், தான் வேலை செய்யும் இடத்தில் தன் உடன் பணியாற்றுவோர்களின் முன் வைத்து, தனக்கு வேறு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுவதாகவும் சிவகுமார் தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஶ்ரீவித்யாவும் தன் பங்குக்கு, சிவகுமாருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காவல் நிலையத்தில் புகாரளித்ததையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இந்த பின்புலத்தில்தான், சிவகுமாரின் மனைவி தாலியைக் கழற்றியது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. மேற்கூறிய வாத பிரதிவாதங்களுக்குப் பிறகு, ஶ்ரீவித்யா தாலியைக் கழற்றியது சிவகுமாருக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும் என்கிற முடிவுக்கு வந்தது.

மனைவி தாலியைக் கழற்றியது, இருவரும் எந்த நோக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை அனுமானிக்க ஒரு சிறிய ஆதாரமாக இருக்கிறது. ஶ்ரீவித்யா தாலியை கழற்றியதோடு மற்ற விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது, இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை, இத்திருமணத்தைத் தொடர விரும்பவில்லை என்கிற முடிவுக்கு நீதிமன்றம் வர உதவியது.

2016ஆம் ஆண்டு வல்லபி Vs ஆர் ரஜசா பாய் வழக்கில் கோஆர்டினேட் பென்ச் "மனைவி தாலியைக் கழற்றுவது, கணவனுக்கு உச்சகட்ட மன உளைச்சளைக் கொடுப்பதாகவே கருதப்படும்" என்று கூறி இருந்ததை சென்னை உயர் நீதிமன்றம் வெறுமனே மேற்கோள் எடுத்துக் காட்டியது.

இப்படி மேற்கோள் காட்டப்பட்டதைத் தான் பல ஊடகங்களும் தவறாகப் புரிந்து கொண்டு, சென்னை உயர்நீதிமன்றமே இக்கருத்தைக் கூறியதாகச் செய்திகள் பிரசுரமாகியுள்ளன.

Live law தளத்தில் வெளியான கட்டுரையை அடிப்படையாகக் கொண்டுகொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

To Read Live Law article

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?