விஜயலக்ஷ்மி ரமணன்: மருத்துவர் டு இந்திய விமான படையின் முதல் பெண் அதிகாரி - இவரது கதை என்ன? twitter
தமிழ்நாடு

விஜயலக்ஷ்மி ரமணன்: மருத்துவர் டு இந்திய விமான படையின் முதல் பெண் அதிகாரி - இவரது கதை என்ன?

Keerthanaa R

இந்திய வரலாற்றில், பல பெண்கள் தங்களின் பெயர்களை பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளனர். வேலு நாச்சியார், டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி, ஜான்சி ராணி, கல்பனா சாவ்லா என சாதனையாளர்களின் பட்டியல் நீளம்.

இவர்களுடன் சேர்ந்து நாம் விஜயலக்ஷ்மி ரமணன் என்ற பெண் குறித்து தெரிந்துகொள்ள போகிறோம்.

இவர் தான் இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி. அதுவும், இவரே தனது சீருடையை வடிவமைத்துக்கொண்டார்.

விமானப்படையில், விங் கமாண்டராக பணியாற்றியது தான் இவரது கடைசி கால சேவை. அதன் பின்னர் ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்தியா ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலத்தில் பிறந்த இவர், அந்த சமயத்தில் பெண்கள் நினைத்து பார்க்கக் கூட முடியாத தடங்கல்களை தகர்த்து வெளிவந்தவர்.

இந்த விஜயலக்ஷ்மி ரமணன் எனும் அம்மையார் யார்? அவரைப் பற்றி இந்த பதிவில் கூறியுள்ளோம்

பிப்ரவரி 27, 1924ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் விஜயலக்ஷ்மி ரமணன். இவரது தந்தை முதலாம் உலகப்போரில் பங்காற்றியவர்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

1955ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தில் இணைந்து, ராணுவ மருத்துவராக தனது சேவையை புரிந்தார். அதற்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.

இந்தியாவின் பல ராணுவ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய இவர், 1971ஆம் ஆண்டு இந்திய விமானப்படை அதிகாரியாக அறிவிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

இவர் விமானப்படை அதிகாரி ஆனபோது, சில ஆண்டுகளுக்கு இவர் மட்டுமே அந்த குழுவில் பெண்மணி. ”முதலில் ஆண்களுடன் பணியாற்ற நான் பயந்தேன். ஆனால், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எதையும் சந்திக்க தயாரானேன்” என்கிறார் விஜயலக்ஷ்மி.

மருத்துவர் என்ற பொறுப்பை ஏற்றாலே எமர்ஜென்சிகள் ஆயிரம் இருக்கும். விஜயலக்ஷ்மிக்கும் அப்படியே.

காலை, மாலை, இரவு, நடுராத்திரி என எதிர்பார்க்காத நேரத்தில் இவருக்கு அழைப்புகள் வரும். எனினும், எதற்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

சில ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக சேவையாற்றியவரை, இராணுவத்துக்கு விண்ணப்பிக்க அவரது கணவர் தான் உந்துகோல் ஆக இருந்துள்ளார். விஜயலக்ஷ்மியின் கணவரும் இந்திய விமானப்படை அதிகாரியாக தான் இருந்தார்.

முதலில் தயங்கிய விஜயலக்ஷ்மி, வீட்டாரின் ஆதரவுடன், இராணுவத்துக்கு செல்ல தயாரானார். 20 ஆண்டுகள் கழித்து விமானப்படை மருத்துவ அதிகாரி ஆனார்.

இராணுவத்தில் அடிப்படை ஒழுக்கம் அவர்களின் சீருடை தான் எனலாம். இந்திய விமானப்படையில் இதுவரை பெண்களே இல்லாததால், அவர்களுக்கான சீருடையும் இல்லை.

விஜயலக்ஷ்மி, தானே ஒரு சீருடையை வடிவமைத்தார். விமானப்படையில் ஆண்களின் சீருடை நீல நிறத்தில் புடவையும், சற்றே பழுப்பு நிறத்தில் ஒரு பிளவுஸும் தயாரித்தார்.

இதுவே அதன் பிறகு விமானப்படையில் பெண்களின் சீருடையாக மாறியது

விஜயலக்ஷ்மி, 1962, 1966, 1971ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற போர் சமயங்களிலும் பணியாற்றினார். ராணுவ அதிகாரிகளை குடும்பக் கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்துதல், அவர்களுக்கு மரபியல் பற்றி கற்றுத்தருவது போன்ற பணிகளையும் செய்தார்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவரது சேவையை போற்றி, அரசு அவருக்கு விசிஷ்ட் சேவா பதக்கத்தை அளித்தது.

விஜயலக்ஷ்மி கர்நாடக சங்கீதம் கற்றிருந்தார். அதுமட்டும் அல்லாமல், அவருக்கு 15 வயது இருக்கும்போது ஆல் இந்தியா ரேடியோவிலும் விஜயலக்ஷ்மி சில காலம் பணியாற்றினார்.

1979ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மருத்துவமனை அமைத்து, இலவசமாக மக்களுக்கு சிகிச்சைகள் அளித்து வந்தார்.

அதன் பிறகு அக்டோபர் 18 ஆம் தேதி, 2020ஆம் ஆண்டு மரணமடைந்தார் விஜயலக்ஷ்மி ரமணன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?