ஷி ஜின்பிங் NewsSense
உலகம்

ஷி ஜின்பிங் வீட்டு சிறை : இந்த வதந்தி பரவியது எப்படி? உண்மை நிலவரம் என்ன? | Explained

NewsSense Editorial Team

உலகின் முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளைப் பட்டியலிட்டால் அதில் சீனாவுக்கு நிச்சயம் ஓர் இடமுண்டு. அப்பேர்பட்ட சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததாகவும் பல வதந்திகள் இணையத்தில் வலம் வந்தன. 

அதை பல ஊடகங்களும் எடுத்து மிக பரபரப்பாக விவாதித்தது. சீன ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஜெனரல் லி கியாவ்மிங் (Li Qiaoming) சீன அதிபராக பொறுப்பேற்கப் போவதாகவும் பேசப்பட்டன. ஆனால் உண்மையில் அப்படி எந்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளும் நடக்கவில்லை என சீன அரசியலை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பல நிபுணர்கள் பல்வேறு ஊடகங்களிடம் கூறியுள்ளனர், தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation - SCO) மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஷி ஜின்பிங் தன்னைத் தானே சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டது தான், அவர் பொதுவெளியில் வராததற்கான காரணம் என அவுட்லுக் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.  

எப்படி இந்த வதந்தி பரவியது?

வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு வரும் சில சீன ஊடகங்களில் ஒன்றான ஃபலுன் காங்கின் ஆதரவு பெற்ற ஊடகம், சீனாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அதிபர் ஷி ஜின்பிங் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த ஊடகத்தினர் கிளப்பிவிட்ட ஆட்சிக் கவிழ்ப்பு வதந்தி சட்டென காட்டுத் தீ போல வெள்ளிக்கிழமையே இணைய வெளியில் பரவத் தொடங்கியது.

சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சாவ் லான்ஜின் (Zhao Lanjian) என்கிற பத்திரிகையாளர், அதிக எண்ணிக்கையில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு விளக்கமுடியாத காரணங்கள் குறிப்பிடப்படுவதாகக் கூறினார். இதை சீனாவில் உள்ள சில ஆன்மிக குழுக்களும், ஃபலுன் காங்கின் ஆதரவு பெற்ற ஊடகங்களும் கையில் எடுத்துக் கொண்டன. 

ஆனால் உண்மையில், விமானங்கள் தொடர்பான தரவுகளைப் பார்த்தால், சிறிய எண்ணிக்கையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது உண்மைதான் என்பது தெரிய வந்தது, அதற்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. 

2022 செப்டம்பர் 23ஆம் தேதி, சீனாவில் அரசியல் சூழல்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் வழக்கம் போல நடைபெற்றுள்ளது. 

அது போல வெளிநாடு வாழ் சீன யூடியூபரான ஜெனிஃபர் செங்கும் சீன ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் கைது குறித்த விஷயத்தை கையில் எடுத்தார். இவர் ஒருபடி மேலே போய், பல ராணுவ வாகனங்கள் சீனாவில் ஏதோ ஒரு சாலையில் பயணிப்பது போல ஒரு காணொளியையும் பதிவிட்டார். அதனுடைய உண்மைத் தன்மையும் ஆராயப்படவில்லை. இது தான் வதந்திகள் பரவலுக்கான அடித்தளமாக அமைந்தது. 

அதனைத் தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்குப் பிறகு, ஷி ஜின்பிங் பொதுவெளிக்கு வராதது, இந்த வதந்திக்கு எண்ணெய் ஊற்றியது போல் அமைந்தது

சீன அதிபர், சீன ராணுவ மற்றும் பாதுகாப்பு சீர்திருத்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததும், இந்த வதந்தியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. இந்தியாவில் உள்ள பல டிவிட்டர் கணக்குகளும் சீன அதிபர் குறித்த வதந்தியை விவாதிக்கத் தொடங்கின. 

சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னுடைய இறுக்கமான பணிகளிலிருந்து அவ்வப்போது சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் பணிக்குத் திரும்புவது சாதாரண ஒன்று என 'தி பிரின்ட்' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு, ஏன்?

பொதுவாக சீனாவில் யார் அதிபராக பதவிக்கு வந்தாலும், ஒட்டுமொத்த சீன ராணுவமும்  கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கும். மியான்மாரைப் போல சீன ராணுவத்தால் அரசியல் தலைவர்களை மீறி ஆட்சிக் கவிழ்ப்பை எல்லாம் நடத்திவிட முடியாது. 

எனவே சீனாவில் ஆட்சிக் கவிழ்ப்பு என ஒன்று நடந்தால் அது அரசியல் தலைவர்களால் மட்டுமே நடத்த முடியும் எனலாம். பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கிறது என்றால் திடீரென கலவரம் வெடிப்பது, மக்கள் கூட்டம் அல்லது மக்களை உள்ளடக்கிய குழுக்கள் எழுச்சி பெறுவது போன்றவற்றைப் பார்க்கலாம். ஆனால் சீனாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பதவியில் இருக்கும் ஒரு தலைவர் பலவீனமாக இருந்தால் ஆட்சிக் கவிழ்ப்பு என்பதைக் குறித்து ஆலோசிக்கலாம். ஆனால் ஷி ஜின்பிங்கோ தன்னை எதிர்ப்பவர்களை ஏறி மிதித்துச் சென்று கொண்டிருக்கும் போது அதற்கான வாய்ப்பே இல்லை எனலாம். சமீபத்தில் கூட ஆறு முக்கிய அரசு அதிகாரிகள், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

சீன அரசு தொடர்ந்து எல்லா பிரச்சனைகளிலும் வழக்கம் போல தன் பலத்தை உணர்த்தவும், தன் வலுவான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. உதாரணத்துக்கு சீனா - இந்தியா இடையிலான லடாக் எல்லைப் பிரச்சனையைக் குறிப்பிடலாம்.

ராணுவம் எங்கே?

இந்தியா உட்பட உலகமே சீனாவில் ஆட்சிக் கவிழ்ப்பா என தாவாடையை சொரிந்து கொண்டிருந்த போது, ஜெர்மானிய செய்தித் தாளான டெர் ஸ்பைகெல்ஸ் (Der Spiegel’s) செய்தியாளர் ஜார்ஜ் ஃபஹ்ரியான் (Georg Fahrion) தியானென்மென் சதுக்கம் போன்ற சீனாவின் முக்கிய இடங்களுக்குச் சென்று ராணுவம் இருக்கிறதா இல்லையா என பார்த்து, எந்த வித ராணுவ நடவடிக்கைகளும் படை குவிப்புகளும் இல்லை என்று கூறினார். ஆக சீனாவில் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது ஒரு வதந்தி என்பது நிரூபனமானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?