வியட்நாம் போர் வரலாறு NewsSensetn
உலகம்

வியட்நாம் போர் வரலாறு : அமெரிக்காவை வீழ்த்திய அமெரிக்க மக்கள் | பகுதி 2

Govind

அமெரிக்க ஜெனரல் வெஸ்ட்மோர்லேண்டின் கட்டளையின் கீழ் சைகோனில் உள்ள வியட்நாமிய தளபதி ஜெனரல் நுயென் வான் தயூவின் அரசாங்க ஒருங்கிணைப்பில் இத்தரைவழி தாக்குதல் நடந்தது.

நிலப்பரப்பை கைப்பற்றுவதை விட எதிரித்துருப்புகளை அதிகம் கொல்லும் ஒரு அட்டூழியக் கொள்கையை வெஸ்ட்மோர்லேண்ட் பின்பற்றினார். 1966-ம் ஆண்டு வாக்கில் தெற்கு வியட்நாமின் மிகப்பெரிய பகுதிகள் பல, சுதந்திரமான குண்டு வீச்சு மண்டலங்களாக (free-fire zones) அறிவிக்கப்பட்டன. அந்த மண்டலங்களில் இருந்து அனைத்து அப்பாவி பொதுமக்களும் வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் மிகப்பெரிய குண்டு வீச்சு விமானமான பி-52 விமானங்கள் இம்மண்டங்களில் பெருமளவு குண்டு வீச்சுக்களை நடத்தின. இம்மண்டலங்களில் வாழ்ந்து வந்த மக்கள் அகதிகளாக சைகோன் மற்றும் பிற நகரங்களுக்கு அருகில் உள்ள அகதி முகாம்களில் நிரம்பி வழிந்தனர். குண்டு வீச்சு பகுதிகள் வாழ முடியாத பகுதிகளாக மாறின.

அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாம் அரசுகளால் கம்யூனிச கொரில்லாக்களான வியட்காங்கின் இறப்பு மிகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், வியட்காங் கொரில்லாக்கள் போரை நிறுத்த மறுத்துவிட்டனர். கம்போடியா, லாவோஸ் வழியாக வந்த உதவிகளை வைத்து வியட்காங் கொரில்லாக்கள் இழந்த பகுதிகளை மீட்டனர். சீனா மற்றும் சோவியத் யூனியன் உதவிகளை வைத்து வடக்கு வியட்நாம் கம்யூனிச அரசு தனது வான்வழி பாதுகாப்பை அதிகரித்துக் கொண்டது.

Protest against Vietnam War 

வியட்நாம் போர் எதிர்ப்பு போராட்டங்கள்

நவம்பர் 1967 வாக்கில், வியட்நாமில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 5,00,000 ஐ நெருங்கியது. மேலும் அமெரிக்க துருப்புகள் 15,058 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,09,527 பேர் காயமடைந்தனர். போர் நீண்டு கொண்டே போனதால், சில வீரர்கள் அவர்களை அங்கேயே வைத்திருப்பதற்கான அரசாங்கத்தின் காரணங்களையும், போர் வெற்றி பெறுவதாக வாஷிங்டனின் தொடர்ச்சியான கொள்கைகளையும் நம்பவில்லை. இவ்வளவிற்கும் அமெரிக்கா தனது இறப்பை குறைத்தே கூறியது. இருப்பினும் சவப்பெட்டிகள் நூற்றுக்கணக்கில் அமெரிக்காவில் வந்திறங்கிய பிறகே அமெரிக்க துருப்புகளின் இந்த போர் குறித்த எதிர்ப்பு எண்ணம் தழைத்தோங்கியது.

Agent Orange

ஏஜெண்ட் ஆரஞ்சு வெடிபொருள்

அமெரிக்கா வியட்நாமில் வகைதொகையில்லாமல் ஏஜெண்ட் ஆரஞ்சு எனும் வெடிமருந்தை டன் டன்னாக கொட்டியது. இம்மருந்தை வீசினால் ஒரு மிகப்பெரிய பகுதி தீப்பிடித்து எரிந்து அதில் உள்ள அனைத்தும் நாசமாகும். பதிலுக்கு வியட்காங் கொரில்லாக்களும் தமது தாக்குதலை அதிகப்படுத்தினர். இத்தகைய சூழலில் அமெரிக்க துருப்புகளின் தார்மீக உறுதி நிலைகுலைய ஆரம்பித்தது.

அவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்தல், போருக்கு பிந்தைய மன அழுத்த நோய் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கலகம் செய்வது, தாக்குவது போன்றவை அதிகரித்தன.

ஜூலை 1966 மற்றும் டிசம்பர் 1973-க்கு இடையில் 5,03,000 அமெரிக்க துருப்புகள் இராணுவத்தை விட்டு வெளியேறினர். அமெரிக்க முன்னாள் இராணுவ வீர்ர்களிடையே போர் எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையுடன் நடந்தேறின. இந்த எதிர்ப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல வியட்நாமில் உள்ள அமெரிக்க துருப்புகளிடத்திலும் நடந்தது.

ஏஜெண்ட் ஆரெஞ்சு மற்றும் இதர குண்டு வீச்சுக்களின் கொடூரமான புகைப்படங்களை தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்களும் போருக்கு எதிரான மனநிலைக்கு மாற ஆரம்பித்தனர். அக்டோபர் 1967-ல் 35,000-த்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்கார்ர்கள் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அருகே போராட்டத்தை நடத்தினர். வியட்நாம் போரில் அப்பாவி வியட்நாம் பொதுமக்கள் கொல்லப்படுவதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இன்னொரு புறம் சைகோனில் இருக்கும் ஊழல் படிந்த அரசாங்கத்தை அமெரிக்கா ஆதரிப்பதையும் அவர்கள் எதிர்த்தனர்.

Richard M Nixon

டெட் தாக்குதல்

ஜனவரி 31, 1968-ல் சுமார் 70,000 வியட்காங் கம்யூனிசப் படைகள் ஜெனரல் கியாப் தலைமையில் தெற்கு வியட்நாமில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கியது. இதுவே டெட் தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. இந்த தாக்குதலை அமெரிக்க மற்றும் தெற்கு வியட்நாமிய படைகள் முறியடித்தன. இதன்காரணமாக கம்யூனிச கொரில்லாக்களை நாம் அழித்துவிட முடியுமென அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தவறாக எண்ணியது.

ஆனால் போர் எதிர்ப்பு மனநிலையில் இருந்த அமெரிக்க மக்களின் நெருக்குதலால் அதிபர் ஜான்சன் வடக்கு வியட்நாமின் மீதான குண்டு வெடிப்பு தாக்குதலை நிறுத்துமாறு உத்திரவிட்டார். ஆனால் தெற்கில் குண்டு வெடிப்புகள் தொடர்ந்தன.

மேலும் 1968-ம் ஆண்டில் அமைதிப் பேச்சுவார்த்தகளை பாரிசீல் நடந்தன. இந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றதும் அமெரிக்க அதிபர் ஜான்சனது செல்வாக்கு குறைந்தது. அதே ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ரிச்சர்ட் எம். நிக்சன் அதிபராக பதவியேற்றார்.

Henry Kissinger

நிச்சனின் வியட்நாமியமயமாக்குதல் கொள்கை

அதிபர் நிக்சனைப் பொறுத்தவரை அவர் வியட்நாம் போரை தொடர விரும்பினாலும் அமெரிக்க இறப்பையும் குறைக்க விரும்பினார். அதன் பொருட்டு வியட்நாமியமயமாக்குதல் எனும் கொள்கையை அறிவித்தார். அதன்படி வான்வழி மற்றும் தரை வழி குண்டு வீச்சுக்களை அதிகப்படுத்துதல் மற்றும் தெற்கு வியட்நாமிய அரசு இராணுவத்திற்கு தேவையான பயிற்சியையும், ஆயுதங்களையும் வழங்கி போரை அவர்களே நடத்திக்கொள்வது என்பதை அமல்படுத்த ஆரம்பித்தார்.

மேலும் பாரிசில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இப்போது இரகசியமாக வியட்நாம் கம்யூனிசக் கட்சியோடு உயர்மட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தினார். இப்பேச்சுவார்த்தையை அமெரிக்காவின் அரசுத்துறை செயலர் ஹென்றி கிசிங்கர் நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தனது முழு துருப்புகளையும் திரும்பப் பெற வேண்டுமென வடக்கு வியட்நாம் வலியுறுத்தியது. மேலும் அமெரிக்கா ஆதரிக்கும் ஜெனரல் வான் தியூ அரசை பதவி விலக வேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதற்கு மேல் இப்பேச்சுவார்த்தை தொடராமல் தோல்வியடைந்தது.

Mai lai Massacare

மைலாய் படுகொலை

மார்ச் 1968-இல் மைலாய் கிராமத்திலிருந்த 400 அப்பாவி பொதுமக்கள் இராணுவத்தால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்றில் இது மைலாய் படுகொலை என்று அழைக்கப்படுகிறது. இப்படுகொலை வரவிருக்கும் மோசமான படுகொலைகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருந்த்து.

மைலாய் படுகொலைக்கு பிறகு அமெரிக்காவில் போர் எதிர்ப்பு போராட்டங்கள் நூற்றுக்கணக்கில் நடந்தன. 1968 மற்றும் 1969-ம் ஆண்டில் அமெரிக்கா இது போன்ற போராட்டங்கள் பலவற்றைக் கண்டது.

நவம்பர் 15, 1969-இல் வாஷிங்டன் டிசியில் 2,50,000 பேர் கலந்து கொண்ட போர் எதிர்ப்பு போராட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் அமெரிக்க துருப்புகள் அனைத்தும் வியட்நாமிலிருந்து திரும்ப அழைக்க வேண்டும் என்று முழக்கமிடப்பட்டது.

அமெரிக்க கல்லூரி வளாகங்களில் வலுவாக இருந்த போர் எதிர்ப்பு இயக்கம், அமெரிக்க மக்களை கசப்பான முறையில் இரண்டாக பிரித்தது. போரை ஆதரிக்கும் மக்கள் போர் எதிர்ப்பாளர்களை நமது ஊரில் ஆன்டி இன்டியன்ஸ் என்று அழைப்பது போல தேச துரோகிகள் என்று அழைத்தனர்.

வியட்நாமில் இருந்து முதன்முறையாக ஒரு பகுதி அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்பட்டதால் எஞ்சியிருந்தவர்கள் கோபமும், விரக்தியும் அடைந்தனர். இது அங்கே அமெரிக்க இராணுவத்தின் கட்டளை படிநிலையில் சிக்கல்களை அதிகப்படுத்தியது. ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல இல்லாமல் ஆங்காங்கே அமெரிக்க வீர்ர்கள் தலைமைக்கு எதிராக கலகம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கண்ணியமற்ற முறையில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் வயது வந்தோர் கட்டாய இராணுவ சேவை ஆற்ற வேண்டும் என்ற சட்டமிருந்தது. ஆனால் அதை ஏமாற்றி 1965-73 ஆண்டுகளில் 5,00,000 அமெரிக்க இளைஞர்கள் கட்டாய இராணுவ சேவையை புறக்கணித்து ஊரை விட்டு ஓடினர். அவர்களில் பலர் கனடாவிற்கு தப்பிச் சென்றனர். இந்த கட்டாய ஆள் சேர்ப்பை 1972-ம் ஆண்டில் அதிபர் நிக்சன் திரும்ப பெற்றார். அடுத்த ஆண்டு கட்டாயத்திற்கு பதில் தன்னார்வ முறையில் இராணுவத்தில் சேரும் முறையை கொண்டு வந்தார்.

முந்தைய பகுதியைப் படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?