லிஸ் ட்ராஸ் Twitter
உலகம்

Liz Truss UK PM : யார் இவர்? பிரிட்டனின் புதிய பிரதமர் முன்னிருக்கும் சவால்கள் என்ன?

Gautham

பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக லிஸ் ட்ராஸ் பொறுப்பேற்க இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு மாத கால தேர்தல் போட்டிகளைக் கடந்து, பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் லிஸ் ட்ராஸ் அம்மையாரைப் பிரதமராகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் ஏறத்தாழ 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

மகாராணி எலிசபெத்தின் தலைமையின் கீழ் பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள 15ஆவது நபர் லிஸ் ட்ராஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமராகப் போகும் மூன்றாவது பெண்மணி இவர்.

ஸ்காட்லாந்து நகரத்தில் உள்ள பால்மொரலுக்குப் பயணித்து, பிரிட்டனின் மகாராணி எலிசபெத் அவர்கள் லிஸ் ட்ராஸை ஆட்சி அமைக்க விடுக்கும் அழைப்பை ஏற்றுக் கொண்டு அரசை அமைக்க வேண்டியது தான் பாக்கி.

இதுவரை எலிசபெத் மகாராணி 14 பிரதமர்களையும் லண்டன் நகரத்தில் பர்மிங்ஹாம் அரண்மனையிலிருந்தபடி தான் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். லிஸ் ட்ராஸுக்கு மட்டும் ஸ்காட்லாந்தில் இருந்து அழைப்பு விடுப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆறு ஆண்டுகளில், கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நான்காவது தலைவர் இவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த லிஸ் ட்ராஸ்?

47 வயதான லிஸ் ட்ராஸ் ஸ்காட்லாந்தில், ஒரு இடது சாரி பெற்றோருக்குப் பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்ட் கல்லூரியில் லிபரெல் டெமாக்ரெட் கட்சியில் சேர்ந்து முடியாட்சி ஒழிக்கப்பட வேண்டும் என போராடினார். பிறகு 1996ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்தார். மறுபக்கம் ஷெல் என்கிற உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

2010ஆம் ஆண்டு இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து இவரது அரசியல் ஏற்றம் தொடங்கியது. சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து டேவிட் கெமரூனின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் செயலராகப் பதவியேற்றார். அதன் பின் நீதித் துறைச் செயலர், தெரசா மே அவர்களின் ஆட்சியின் கீழ் கருவூலத்தின் முதன்மைச் செயலர், போரிஸ் ஜான்சன் தலைமையின் கீழ் சர்வதேச வர்த்தகத் துறைச் செயலர் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலராக பணியாற்றினார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தவர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கடுமையாகக் கண்டித்தவர். சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர், அதோடு அரசியலிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் சேர்ந்து தான் அவரை பிரதமர் பதவியில் அமரச் செய்திருக்கிறது.

அக்மார்க் அரசியல்வாதிகளைப் போலவே லிஸ் ட்ராஸும் சில முறை யூ டேர்ன் எல்லாம் போட்டிருக்கிறார், சர்ச்சையான கருத்துக்களைக் கூறியுள்ளார் என்றாலும், வரி குறைப்புத் திட்டம், போரிஸ் ஜான்சனுக்கு விசுவாசமாக இருந்தது போன்ற விஷயங்கள் எல்லாம் கன்சர்வேடிவ் கட்சியினர் மத்தியில் ரிஷி சுனக்கை விட அதிக வாக்குகளைப் பெற உதவியது.

எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்

லிஸ் ட்ராஸ் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட அடுத்த நொடியிலிருந்து துரிதமாகச் செயல்பட்டுத் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பட்டியல் ஏராளம்.

சராசரி சாமானியர்களால் தாங்க முடியாத பணவீக்கம், பில்லைப் பார்த்தாலே நெஞ்சைப் பிடிக்கச் செய்யும் மின்சாரம் & எரிசக்தி கட்டணங்கள், சரியும் பொதுச் சேவைகள், பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்லும் மனநிலையில் இருக்கும் ஸ்காட்லாந்து, இது போக உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சனை, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையிலான உறவு முறை... எனப் பிரச்சனைகளை அடுக்கலாம். இதை எல்லாம் லிஸ் ட்ராஸ் திறம்படக் கையாள்வார் என கன்சர்வேடிவ் கட்சி நம்புகிறது.

போரிஸ் ஜான்சன் ராஜினாமா

கிறிஸ்டோபர் ஜான் பின்சர் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2020 முதல் 2022ஆம் ஆண்டு தொடக்கம் வரை வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த 2022 பிப்ரவரியில், கிறிஸ்டோஃபர் ஜான் பின்சர் அரசின் துணை முதன்மைக் கொறடாவாக (Deputy Chief Whip) பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

கடந்த ஜூன் மாத இறுதியில் (29ஆம் தேதி புதன்கிழமை) லண்டன் நகரத்தில் உள்ள கார்ல்டன் கிளப்பில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டுள்ளார். பிரிட்டன் நாட்டை ஆளும் கட்சியின் துணை முதன்மைக் கொறடா பதவியில் இருக்கும் ஒருவர், பொதுவெளியில் இப்படி தவறாக நடந்து கொள்ளலாமா? என ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டு செய்தி வெளியாகத் தொடங்கியது.

அப்போது தான், இதே கிறிஸ் பின்சருக்கு எதிராக, சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டுப் புகார் கொடுக்கப்பட்டதாகச் செய்தி வெளியானது. அப்போதிலிருந்து இந்த நொடி வரை பிரிட்டன் அரசியலில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

"நேற்று இரவு நான் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டேன். நான் என்னையும் மற்றவர்களையும் அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு சூழலில் நான் துணை முதன்மை கொறடா பதவியிலிருந்து விலகுவது தான் சரியாக இருக்கும்" என கிறிஸ் பின்சர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வியாழக்கிழமை ராஜினாமா செய்துவிட்டார். இதை 'சன்' என்கிற பத்திரிகைதான் முதலில் பிரசுரித்தது.

இருப்பினும், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை விடுவதாக இல்லை. அதெப்படி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, முறையாகப் புகார் கொடுக்கப்பட்ட ஒருவரை அரசின் உயர் பதவியில் அமர வைக்க முடியும் எனத் தொடர்ந்து அரசின் பல தரப்பினரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பி வந்தன.

பிரதமர் போரிஸ் ஜான்சன், கிறிஸ் பின்சரை அரசு உயர் பதவியில் அமர வைப்பதற்கு முன்பே, கிறிஸ் பின்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியுமா என ஜூலை 1ஆம் தேதி, பிரதமர் வீடு மற்றும் அலுவலக தரப்பினரிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர்.

அப்போது பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கு தெரியாது என்று கூறினார். மேலும் அனைத்து அமைச்சரகம் சார்ந்த நியமனங்களும் கேபினெட் ஆஃபிஸ் ப்ரொப்ரைட்டி மற்றும் கோட்பாடு அணிதான் மேற்கொள்கின்றன. கிறிஸ் பின்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், அவரை நியமிக்க எந்த வித தடையும் அப்போது இல்லை என்றும் கூறினார்.

இதே கருத்தை பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் போரிஸ் ஜான்சனின் அமைச்சர்களும் வழிமொழிந்தனர். பணி மற்றும் ஓய்வூதியச் செயலர் தெரெசி காஃபி (Therese Coffey), குழந்தைகள் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர் வில் குவின்ஸ் (Will Quince), கல்வித் துறைச் செயலர் நதீம் சஹாவி எனப் பலரும் இதில் அடக்கம்.

ஜூலை 4ஆம் தேதி மதியம் சுமார் 12:30 மணிக்கு, போரிஸ் ஜான்சனின் அலுவலகம் முன்பு கூறியதற்கு நேர்மாறாக 'பிரதமருக்கு கிறிஸ் பின்சரின் பாலியல் குற்றச்சாட்டு குறித்துத் தெரியும் என்றும், அப்பிரச்சனை முறையாகப் புகார் கொடுக்கப்படவில்லை அல்லது அப்பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது' என தலைகீழாக மாற்றிக் கூறியது.

Boris Johnson

ஜூலை 5ஆம் தேதி புதன்கிழமை, லார்ட் மெக்டொனால்ட் என்கிற பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உயர் பதவியிலிருந்த அதிகாரி ஒருவர், பிரிட்டன் நாடாளுமன்ற தரக்கட்டுப்பாட்டு ஆணையருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் பிரதமர் அலுவலகம் சொல்வதில் முழு உண்மை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு பிபிசி ஊடகத்துக்குக் கொடுத்த பேட்டியில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், கிறிஸ் பின்சரின் மோசமான பாலியல் நடவடிக்கைகளைக் குறித்து கேபினெட் உயரதிகாரிகளிடம் கூறியதாகவும், அந்த உயரதிகாரிகள் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் அதைத் தெரியப்படுத்தியதாகவும் கூறினார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, பிரதமர் போரிஸ் ஜான்சனே பிபிசி ஊடகத்துக்குக் கொடுத்த பேட்டியில் கிறிஸ் பின்சருக்கு எதிராக நீண்ட காலத்துக்கு முன் ஒரு வாய் மொழிப் புகார் கூறப்பட்டதாகவும், அதற்கு எதிராகத் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்காதது தவறு என மன்னிப்பும் கோரினார்.

அடுத்தடுத்த பதவி விலகல்கள்

கிறிஸ் பின்சர் பிரச்சனையைத் தொடர்ந்து, கொரோனா காலகட்டத்தில் பிரிட்டன் அரசின் சுகாதாரத் துறைச் செயலராக இருந்து திறம்படச் செயல்பட்ட சஜித் ஜாவித், அதே கொரோனா காலகட்டத்தில் பிரிட்டனின் நிதி அமைச்சராக இருந்து பலரிடம் நல்ல பெயர் வாங்கிய ரிஷி சுனக் உட்பட சுமார் 60 செயலர்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பிலிருந்த அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.


கிறிஸ் பின்சர் பிரச்சனை மட்டுமின்றி, போரிஸ் ஜான்சனே கொரோனா விதிமுறைகளை மீறியது, அரசைச் சரியான திசையில் வழிநடத்திச் செல்லாமல் இலக்கின்றி தடுமாறுவது, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது, போன்ற பல பிரச்சனைகள் அவரை பதவியிலிருந்து இறக்கக் காரணமாக அமைந்தன. கடந்த 2022 ஜூன் மாதத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 41% நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக வாக்களித்தனர்.

அடுத்து என்ன?

லிஸ் ட்ராஸ் அம்மையார் உடனடியாக பிரிட்டன் அரசை அமைக்க வேண்டும், தன் அமைச்சரவையில் யாரை அமைச்சராக்கப் போகிறார் என்பதைப் பொருத்து அவருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையில் உள்ள உறவைப் புரிந்து கொள்ள முடியும்.

லிஸ் ட்ராஸ் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் விருப்பமான தேர்வாக இருந்திருக்கிறாரே ஒழிய, அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முதற்கட்ட விருப்பமான தேர்வாக இல்லை என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலையும் அவர் எதிர்கொள்ள வேண்டும், கட்சியின் எதிர்பார்ப்புகளையும் சமாளிக்க வேண்டும். இதற்கிடையில் புதிதாகப் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள லிஸ் ட்ராஸ் பிரிட்டனில் பொதுத் தேர்தலை நடத்த விரும்பினால் நடத்தலாம்.

அப்படி பொதுத் தேர்தல் நடத்தி, அதில் வெற்றிவாகை சூடினால், புதிய தேர்தல் வாக்குறுதிகளோடு எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்கும் வாய்ப்பு லிஸ் ட்ராஸ் அம்மையாருக்குக் கிடைக்கும். புதிதாகப் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்க இருக்கும் லிஸ் ட்ராஸ் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?