Octopus Using Trash

 

Twitter

உலகம்

ஆழ்கடலில் அதிகரிக்கும் குப்பைகள், ஆக்டோபஸ்களின் வீடுகளாகும் அவலம்

Antony Ajay R

சமீபமாகக் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆக்டோபஸ்கள் நாம் பயன்படுத்திக் கடலில் தூக்கியெறிந்த பாட்டில்கள் மற்றும் இதர குப்பைகளை வீடுகளாக்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடல் வாழ் ஆக்டோபஸ்கள் மனிதன் தூக்கியெறியும் குப்பைகளில் வசிக்கவும், முட்டையிடவும் செய்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆழ்கடலில் நீந்தும் குழுவினர் சில தசாப்தங்களாகவே ஆக்டோபஸ்கள் கடலில் வீசப்படும் மனித குப்பைகளை ஆராயவும் பயன்படுத்தவும் செய்கின்றன எனக் கூறுகின்றனர். அத்துடன் அது போன்ற 250க்கும் மேலான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைக் கடல் உயிரியல் வல்லுநர்கள் சேகரித்துள்ளனர்.

உடைந்த கண்ணாடி பாட்டில்கள், சோடா கேன்கள், ஜார்கள், டின்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் 24 வகையான ஆக்டோபஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் சில தூக்கியெறியப்பட்ட பேட்டரிகளை கூட பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

கடலில் ஆக்டோபஸ்கள் வசிக்க இயற்கையாக அமைந்திருக்கும் கடல் சிப்பிகள், கடல் வாழ் தாவரங்கள் தற்காலத்தில் மிகவும் அரிதாகிவிட்டன. இதனால் கடல் வாழ் உயிரிகள் இது போன்ற பொருட்களைப் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலியாவிலுள்ள ரியோ கிராண்டேயின் ஃபெடரல் பல்கலைக்கழக கடல்சார் ஆய்வாளரான மைரா ப்ரோயெட்டி.

Octopus in Seashells

கோக்கோநட் ஆக்டோபஸ் எனப்படும் தேங்காய் ஆக்டோபஸ்கள் தங்களின் தலைப்பகுதியை ஏதேனும் ஒரு பொருளுக்குள் மறைத்துக்கொண்டு கால்களால் கடலின் மணல் பரப்பைத் தேய்த்து நடப்பதன் மூலமாக இறையைத் தேடும். இவை பொதுவாகத் தேங்காய் ஓடுகள் மற்றும் கடல் சார் பொருட்களைப் பயன்படுத்தி தலையை மறைத்துக்கொள்ளும். ஆனால் தற்போது குப்பைகளைப் பயன்படுத்துவதை ஆய்வாளர்கள் கவனித்திருக்கின்றனர்.

கடலில் ஆக்டோபஸ்கள் இது போன்று பயன்படுத்துவதில் 40 விழுக்காடு கண்ணாடி பொருட்களும் 25 விழுக்காடு பிளாஸ்டிக் பொருட்களும் அடங்கும். கண்ணாடி பொருட்களில் வசிப்பது கிட்டத்தட்டச் சிப்பிக்குள் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கலாம்.

உடைந்த கப்பல்களின் பகுதிகளைக் கடல் வாழ் உயிரினங்கள் பயன்படுத்துவதை இதற்கும் முன் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பீர் பாட்டில்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. பிக்மி எனப்படும் சிறிய ரக ஆக்டோபஸ்கள் இயற்கையான வாழ்விடங்களில் வசிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு பெரும்பாலும் பீர் பாட்டில்களில் தங்குகின்றன. கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆக்டோபஸ்களின் இந்த நடவடிக்கை அதிகரித்திருப்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த காலத்தில் ஆழ்கடல் புகைப்பட ஆர்வம் மக்களிடத்தில் பெருகியிருப்பது குறிப்படத்தக்கது. இதன் விளைவாகவும் கடலில் குப்பைகள் உருவாகியுள்ளன.

கடலில் குப்பைகள்

ஆக்டோபஸ்கள் தங்குமிடத்துக்காகக் குப்பைகளை நம்பியிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மற்ற மீன் வகைகளை மனித குப்பைகள் எப்படி பாதிக்கின்றன என்பதையும் அறியவேண்டும். ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலமே இவற்றைக் கண்டறிய முடியும். இதுவரை கிடைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் தரவுகள் ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியாக அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆக்டோபஸ்களுக்கு பெருகிவரும் மனித குப்பைகள் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் அதிகரிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பேட்டரி போன்ற இரசாயன குப்பைகள் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆக்டோபஸ்களை போல இந்த குப்பைகளுடன் தங்களைப் பொருத்திக்கொள்ள இயலாத உயிரினங்களின் நிலை இன்னும் கவலைக்கிடமாகலாம் எனக் கடல் உயிரியல் அறிஞர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?