PubG காதல்: பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பெண் - காதலுடன் சேர்ந்தாரா? Seema / Twitter
உலகம்

PubG காதல்: பாகிஸ்தானில் இருந்து 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பெண் - காதலுடன் சேர்ந்தாரா?

Antony Ajay R

சீமா குலாம் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தனது இந்திய காதலனுக்காக எல்லையைக் கடந்து சட்ட விரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.

தான் மட்டுமல்லாமல் தனது 4 குழந்தைகளையும் அவர் கூட்டி வந்துள்ளார். சீமாவின் சகோதரர் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றுகிறார். இதனால் இவர் பாகிஸ்தானின் உளவாளியா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

சீமாவும் அவரது காதலனான சச்சின் மீனாவும் தான் இப்போது உத்தரபிரதேசத்தில் பேசு பொருளாக இருக்கின்றனர். சர்வதேச செய்தி நிறுவனங்கள் முதல் உள்ளூர் யூடியூப் சேனல்கள் வரை பலரும் சீமா-சச்சின் தம்பதியிடம் பேட்டிகளை எடுத்து வருகின்றனர்.

எல்லைகளைத் தாண்டிய இவர்களின் காதல் பப்ஜி விளையாட்டின் மூலம் உருவானது எப்படி? யார் இந்த சீமா, இவரது பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்...

சீமா பாகிஸ்தானில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். இவர் தனது பதின் பருவத்தில் ஒருவரைக் காதலித்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

17 வயதான சீமாவுக்கு அவரது விருப்பம் இல்லாமலேயே குலாம் ஹைதர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சீமா குலாமாக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு இப்போது 4 குழந்தைகள் உள்ளனர்.

2019ம் ஆண்டு சீமாவின் கணவர் வேலைக்காரணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். இந்த காலக்கட்டத்தில் சீமா பொழுது போக்காக பப்ஜி விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார்.

மரியா கான் என்ற பெயரில் பப்ஜி விளையாடிய சீமாவுக்கு சச்சின் மீனா என்ற இந்தியர் கேம் ரிக்வஸ்ட் அனுப்பியுள்ளார். இருவரும் இணைந்து விளையாடத் தொடங்கியுள்ளனர்.

சச்சின் அதிக நேரம் விளையாடி பயிற்சி பெற்றவராக இருந்துள்ளார். சீமாவோ விளையாட்டுக்கு புதிது. இப்படிதான் இவர்களின் சந்திப்பு நடந்தது.

தினமும் ஒன்றாக விளையாடத் தொடங்கியவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களாகியிருக்கின்றனர். சீமா தனது மொபைல் எண்ணை சச்சினுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சச்சின் தினமும் "குட் மார்னிங்", "நான் விளையாடப் போகிறேன் நீங்களும் வாருங்கள்" என மெசேஜ் செய்யத் தொடங்கியுள்ளார்.

நெருங்கிய நண்பர்களான இவர்கள் இரவு நேரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர். சில சமயம் இரவு முழுவதும் கூட பேச்சு நீண்டதாக சீமா தெரிவித்திருக்கிறார்.

சீமா வீடியோக் காலில் தனது வீடு மற்றும் சுற்றுபுறத்தை சச்சினுக்கு காட்டியுள்ளார். இந்தியாவில் இருந்து ஒருவர் தன்னுடன் பேசுவது மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். சச்சினும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பெண் தன்னுடன் பேசுவது உற்சாகமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

நாள் போக்கில் இவர்களது நட்பு காதலாக மலர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் தான், 4 குழந்தைகளுடன் இருக்கும் போது சச்சினைக் காதலிப்பது சரியா என அவருக்கு பல கேள்விகள் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவர் காதலுக்காக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

"நான் பாகிஸ்தானை வெறுக்கவில்லை. எனது சகோதரிகள் அங்கு தான் வாழ்கின்றனர். என் பெற்றோரின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது" என அவர் பேசியுள்ளார்.

மேலும், "வாழ்க்கை ஒரே ஒரு முறை கிடைக்கிறது. பின்னொரு நாளில் அது பறிக்கப்படுகிறது... இந்த வாழ்க்கையில் அன்பு தான் முக்கியம். இதனால் தான் இறுதியாக நான் என் காதலைத் தேர்ந்தெடுத்தேன்." என பிபிசி தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

சச்சின் மீனாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் செல்லக் கூடிய நேபாளத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

முதல் சந்திப்பில் சச்சின் மீனாவை நேபாளத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அப்போது லாகூரில் உள்ள தர்காவுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வந்ததாலும் குழந்தைகள் கராச்சியில் இருந்ததாலும் சீமா மீண்டும் பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

குலாம் ஹைதர் வீடியோ:

இரண்டு மாதங்களுக்கு பிறகு சீமா தன் பெயரில் இருந்த வீட்டை விற்று 12 லட்சம் பணத்தையும் தன் வரதட்சணை நகைகளையும் எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் நேபாளம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்கு ரயிலில் வந்தார்.

சச்சின் தனது கணவர் என டிக்கெட் எடுத்துக்கொண்டார். டிக்கெட் சரிபார்ப்பு அதிகாரிகளிடம் சச்சினை பேச வைத்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் சீமாவிடம் அடையாள அட்டைக் கேட்டபோது, அதனைப் பயணத்தில் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் சீமாவின் மூத்த மகள் உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததால் கருணை கொண்டு அதிகாரிகள் சீமாவை பயணத்தை தொடர அனுமதித்துள்ளனர்.

நெருக்கடியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் எளிதாக வரமுடிந்ததாக சீமா பிபிசி தளத்தில் கூறியுள்ளார். சீமா சச்சினின் வீட்டுக்கு வந்த பிறகு அவரது அடையாளம் குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

காவல்துறையில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணையில் இவர்களது கதை தெரியவந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட சீமா மற்றும் சச்சின் இப்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர்.

இதற்கிடையில் சவுதி அரேபியாவில் இருக்கும் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை திரும்ப அனுப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது சகோதரன் குறித்து சீமா, ”2022ல் எனது சகோதரன் இராணுவத்தில் சேர்ந்தார். இப்போது அவர் 18,000 சம்பளம் வாங்கும் சாதாரண ஆள் மட்டுமே. அவருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

இவர்களது காதல் கதையில் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள நீங்களும் ஆர்வமாக இருக்கிறீர்கள் தானே!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?