இலங்கை : பொருளாதார நெருக்கடி NewsSense
உலகம்

இலங்கை : பொருளாதார நெருக்கடி - தீவு தேசம் மீள என்ன வழி? - விரிவான விளக்கம்

NewsSense Editorial Team

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை மக்களால் நிரம்பி வழிந்த காட்சிகளை யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் கண்டோம்.


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு போன்ற மக்களுக்கு தேவையான மிக அத்தியாவசியமான பொருட்கள் கூட நாளுக்கு நாள் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.


மக்கள் கையில் போதிய பணம் இல்லை, அப்படியே ஒருவேளை அடித்து பிடித்து பணத்தை திரட்டினாலும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது மிகக் குறைவாகக் கிடைக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. சர்வதேச பன்னாட்டு நிதியம், உலக வங்கி, இலங்கையின் நட்பு நாடான சீனா... என எவரும் இலங்கையை கைகொடுத்து தூக்கிவிடும் நிலையில் இல்லை.

இலங்கை நெருக்கடிக்கு என்ன காரணம்?

ஒற்றை சொல்லில் விடை வேண்டுமானால் 'கடன்'. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இலங்கை சாவரின் கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கத் தொடங்கியது. அதோடு பல நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. குறிப்பாக சீனாவிடம் இருந்து. இந்த கடன் தொகை எல்லாம் ஒன்று சேர்ந்து இன்று இலங்கையின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது.

2022 ஆம் ஆண்டில் மட்டும் 6.8 பில்லியின் டாலரைத் திருப்பி செலுத்த வேண்டும். 1.5 பில்லியின் டாலர் கடன் சாவரின் கடன் பத்திரங்களுக்கு மட்டும் செலுத்த வேண்டும். கடந்த 2022 ஏப்ரல் காலகட்டத்திலேயே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே "நாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் திறன் எங்களுக்கு இல்லை" என்று கூறியதும் இங்கு நினைவு கூறத்தக்கது.


இப்படி எந்தவித அடிப்படை திட்டமிடலுமின்றி கண்மூடித்தனமாகக் கடன் வாங்கியது இன்றைய இலங்கையின் நெருக்கடி நிலைக்கு அச்சாரமாக அமைந்தது.


கொரோனாவுக்கு முன்பு வரை இலங்கை தன்னுடைய செழிப்பான சுற்றுலா வருமானத்தைக் கொண்டு கடன்களுக்கான வட்டியையாவது செலுத்தி வந்தது. கொரோனாவுக்கு பிறகு சுற்றுலா வருமானம் சரிந்தது மேலும் பிரச்னையைத் தீவிரமாக்கியது.

கரன்சி பலவீனம் + வரி குறைப்பு

கடந்த ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு 200 இலங்கை ரூபாய் என கரன்சியை பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தை இலங்கை மத்திய வங்கி கைவிட்டது. ஒரு அமெரிக்க டாலருக்கு 250 இலங்கை ரூபாய் வரை கருப்பு சந்தையில் கிடைத்ததால், வெளிநாடுகளில் வாழ்ந்து வந்த இலங்கை மக்கள், தங்கள் வீட்டுக்குக் கருப்புச் சந்தை வழி பணத்தை அனுப்பத் தொடங்கினர்.

இது இலங்கை ரூபாயின் மதிப்பை மேலும் கடுமையாக பாதித்தது. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியது இலங்கை அரசு.


இதற்கெல்லாம் மணிமகுடம் வைத்தார் போல, இலங்கை அரசு மேற்கொண்டு வரிச்சலுகைகளை அறிவித்தது. அது இலங்கையில் ஒட்டுமொத்த ஜிடிபியில் சுமார் 1.5% என்கிற அளவுக்கு அதிகமாக இருந்தது.

எல்லா பிரச்னைகளும் வெடித்து பூதாகரமாக உருவெடுத்த பிறகு விழித்துக் கொண்ட இலங்கை மத்திய வங்கி, கடந்த சில மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி இலங்கை ரூபாயை அச்சிட்டது. சுருக்கமாக இலங்கை பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தை சரமாரியாக அதிகரித்துவிட்டது. இதனால், கடந்த 2022 ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 16 சதவீதத்தை தொட்டது.


அதிகப்படியாக கடன் வாங்கியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்தது, அளவுக்கு அதிகமாக இலங்கை ரூபாய் நோட்டை அச்சிட்டது, கட்டுப்படுத்த இயலாத பணவீக்கம்... என ஒரு மிக மோசமான பொருளாதார சுழலில் சிக்கிக் கொண்டுள்ளது இலங்கை. மேற்கூறிய பிரச்சனைகளில் எதைத் தொட்டாலும் அது மேற்கொண்டு இலங்கை பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவே அமைகிறது.

Rajapaksa

இதற்கு சீன கடன்கள் முக்கிய காரணமா?

இலங்கைக்கு பல நேரங்களில் சீனா கடன் கொடுத்ததும், உதவியதும், சில திட்டங்களில் முதலீடு செய்ததும் உண்மைதான். ஆனால் இலங்கையின் ஒட்டுமொத்த கடனில் சுமார் 10% கடன்கள் மட்டுமே சீனா கொடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சீன கடன்களால்தான் இலங்கை திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்று கூறுவது சரியல்ல.
சர்வதேச பன்னாட்டு நிதியம் உலக வங்கி போன்ற மிகப்பெரிய நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதைவிட, சீனாவிடமிருந்து கடன் வாங்குவது மிக எளிது. சீன கடன்களில் அதிக விதிமுறைகள் கிடையாது. ஆகையால்தான் இலங்கை போன்ற பல நாடுகள் சீனாவிடம் சட்டென கடன் வாங்கிக் கொள்கின்றன. இலங்கையின் ஒட்டுமொத்த கடன்களில் $17 பில்லியின் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான கொள்கையால் அடிவாங்கிய விவசாயம்

இலங்கையில் ஆர்கானிக் விவசாயம் நூறு சதவீதம் அமல்படுத்தப்படும் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தன் தேர்தல் பிரசாரங்களில் கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகு 100% ஆர்கானிக் விவசாய முறைகள் அமல்படுத்தப்பட்டன. செயற்கை ரசாயன உரங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை.

எதார்த்தத்தில் உரங்களை இறக்குமதி செய்து மானிய விலையில் மக்களுக்கு கொடுக்க இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லை.
அரசின் இந்த ஒரு தவற்றால் இலங்கையில் ஒட்டுமொத்த விவசாயமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இலங்கையின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியே கிட்டதட்ட 40% சரிந்தது.

இலங்கை விவசாயிகளால், விவசாயத்துக்கு வாங்கிய கடனைக் கூட திருப்பி செலுத்தி இயலவில்லை. அவ்வளவு ஏன்... அவர்களுடைய சொந்த உணவு தேவைக்கு கூட போதுமான அளவுக்கு சம்பாதிக்க முடியாத அவலம் ஏற்பட்டது.

அதேபோல இலங்கையில் பிற்போக்குத்தனமான, எதார்த்தத்துக்கு ஒத்து வராத எரிபொருள் மானிய முறை கடைபிடிக்கப்பட்டது. அதனால் சுமார் 30 சதவீத இலங்கை மக்கள் மட்டுமே பயனடைந்தனர்.


அதேபோல கடந்த ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டு வந்த, மின்சாரத்துக்கு விலையை நிர்ணயிக்கும் முறையை தற்போதைய அரசு நீக்கியது. விளைவு இன்று மின்சார உற்பத்திக்கு கூட போதுமான கச்சா எண்ணெய் போன்ற எரிபொருட்களை இறக்குமதி செய்து மின்உற்பத்தியை தொடர முடியவில்லை. இப்படி பல கொள்கை ரீதியிலான சொதப்பல்களை இலங்கை அரசு மேற்கொண்டது, இன்றைய நெருக்கடிக்கு வலு சேர்த்தது.

இலங்கை பிழைக்க என்னதான் வழி?

சர்வதேச பன்னாட்டு நிதியம் போன்ற உலக அளவில் பிரபலமான நிதி அமைப்புகள் மத்தியஸ்தம் செய்து, இலங்கையின் கடன்களை மறுசீரமைக்க வேண்டும். வட்டியை குறைப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிப்பது என எதையாவது செய்து இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில், இலங்கைக்கு சிறு நாடுகளிடமிருந்து பொருள் உதவி பண உதவி போன்றவைகள் கிடைக்கலாம். அதேபோல இந்தியா போன்ற சற்று வலுவான நாடுகளிடமிருந்து ஒரு நல்ல உதவி கிடைக்கும் என்று கூட இலங்கை எதிர்பார்க்கலாம். ஆனால் இவை எதுவும் இலங்கையில் நிலவும் பிரமாண்ட பிரச்னையை தீர்க்க உதவாது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?