ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு
அரேபிய தீபகற்பத்திற்கு தென்கிழக்கு கடற்கரையின் அருகே அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடு ஓமன். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் என மூன்று முக்கிய இஸ்லாமிய நாடுகளோடு தன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளோடு தன் கடல் பரப்பபு எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது ஓமன்.
ஓமன் நாட்டில் பசுமையான பகுதிகள் குறைவு, ஆனால் அந்த நாட்டின் கடற்கரை பகுதிகளில் சில செழிப்பான பகுதிகள் இருக்கின்றன.
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தை ஒன்றாக இணைத்தால் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு வருமோ, அதே அளவுக்கான நிலப்பரப்பை கொண்ட சிறிய நாடு, கடந்த சில தசாப்தங்களில் கண்டிருக்கும் வளர்ச்சி பலரையும் ஆச்சர்யப்பட வைக்கும்.
மஸ்கட்டை தலைநகராக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் இன்று இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இப்போதும் இங்கு முடியாட்சி முறை வழக்கத்தில் இருக்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் ஏழ்மை நாடுகளில் ஒன்றாக இருந்த ஓமன், இன்று ஒரு வளமான நாடாக உருவெடுத்தது எப்படி?
ஓமன் நாட்டின் வரலாறு:
ஒட்டுமொத்த அரேபிய நாடுகளிலேயே மிகப் பழமையான நாடுகளில் ஒன்று ஓமன் என சில வலைதளங்கள் சொல்கின்றன. அழகான கடற்கரைகள், வளமான வரலாறு, அற்புதமான கோட்டைகள், ஆங்காங்கே சில பிரமாதமான மலைகள், பல வகையான வன உயிர் விலங்கினங்கள், முடிவற்ற பாலைவனங்கள் என ஓமனை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
ஓமனில் கிடைக்கும் வாசனை சாம்பிராணிகளுக்கு இன்றும் உலக சந்தையில் ஒரு தனி மதிப்பு இருக்கிறது.
கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளாகவே, இன்று ஓமன் என்று அழைக்கப்படும் நாட்டுக்குள் இருக்கும் தோஃபர் (Dhofar) என்கிற பகுதியில் தான் மிகப்பெரிய அளவில் வாசனை சாம்பிராணிக்கான மூலப்பொருட்கள் கிடைத்தன. இன்றுவரை கிடைத்தும் வருகின்றன.
இந்த பகுதியில் இருந்துதான் வரிசையாக இந்தியா, ஆப்பிரிக்கா என பல நாடுகளுக்கும் வாசனை சாம்பிராணிப் பொட்டலங்கள் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.
16ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலேயே போர்ச்சுகள் நாட்டின் ஆட்சியாளர்கள், ஓமன் நாடு அமைந்திருக்கும் நிலப்பகுதி சர்வதேச அளவில் வர்த்தகத்திற்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் ஓமன் மீது தாக்குதல் நடத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் மட்டும், ஓமன் நாடு சுமார் 150 ஆண்டுகள் இருந்தது. அதன் பிறகு ஓமன் நாட்டில் வாழ்ந்து வந்த உள்ளூர் மலைவாழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, போர்ச்சுகீசியர்கள் விரட்டப்பட்டனர் என்கிறது சில வலைதளங்கள்.
இன்று வரை ஓமன் நாட்டின் பல பகுதிகளில் போர்ச்சுகீசியக் கட்டிடக்கலையின் சாயல்களையும் கட்டிடங்களையும் பார்க்க முடிகிறது.
அல் சயித் ராஜ பரம்பரை (Al Said dynasty):
அஹ்மத் பின் சயித் அல் புஸைதி (Ahmad bin Said al-Busaidi) என்கிற ராணுவ ராஜ தந்திரி சோஹர் என்கிற பகுதியின் ஆளுநராக இருந்து, பெர்ஷிய படையெடுப்பை விரட்டியடித்தார். 1744ஆம் ஆண்டு அவர் இமாமாக தேர்வு செய்யப்பட்டார்.
இப்படித் தான் அல் சயித் ராஜபரம்பரை, ஓமன் நாட்டின் அரியணையில் அமர்ந்தது. காலங்கள் ஓடினாலும், ஓமன் மட்டும் அல் சயித் பரம்பரையை விட்டு விலகவில்லை.
1800 களில் ஒருங்கிணைந்த ஓமனாக இருந்த நிலப்பகுதிகளை சயித் பின் சுல்தான் (Said bin Sultan) என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் சன்சிபர் (Zanzibar) பகுதியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். அதே பகுதியில் மாடமாளிகை, கூட கோபுரங்கள், தோட்டங்கள் என பலவற்றையும் கட்டி சிறப்பாக வாழ்ந்து வந்தார்.
ஓமன் நாட்டிற்கு பல மசாலா பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது ஓமனின் கஜானாக்களை கணிசமாக நிறைக்க உதவியது.
பிரிட்டன் போல, ஓமன் நாட்டின் நிலபரப்பின் மீது பெருங்காதலோடு காத்திருந்த சக்திகளைச் சமாளிக்கவும், தன் நாட்டு வணிகம் & பொருளாதரத்தை மேம்படுத்தவும் புத்திசாலித்தனமாக அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்து கொண்ட சுல்தான் இவர்.
பிரிந்த நாடு:
1856 ஆம் ஆண்டு சயித் சுல்தான் காலமான பிறகு அவருடைய இரு மகன்களுக்கு இடையிலான போட்டி காரணமாக ஒருங்கிணைந்த ஓமனை, சன்சிபர் மற்றும் ஓமன் என இரண்டாகப் பிரித்துக் கொண்டனர். அடுத்த சில தசாப்தங்கள் சற்றே குழப்பத்துடனேயே கடந்தது.
1932ஆம் ஆண்டு, சயித் பின் தைமுர் என்கிற சுல்தான் ஓமனின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பழமைவாதக் கோட்பாடுகளை கொண்டிருந்த சுல்தான், ஓமனுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த உறவுகளை துண்டித்துக் கொண்டார்.
அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே ஓமன் நாட்டின் பொருளாதாரத்தை அது பாதித்தது. சொல்லப்போனால் ஓமன் நாட்டில் வறுமை வழிந்தோடியது என சில வலைத்தளங்கள் சொல்கின்றன. கல்வியறிவு இல்லாமை, குழந்தைகள் இறப்பு என நாட்டின் பல முக்கிய துறைகள் தரைதட்டின.
ஒரு கட்டத்தில், ஓமன் நாட்டில் வாழ்ந்து வந்த மக்களே தங்கள் சுல்தான் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். அப்போது பிரிட்டனுக்கு சென்று படித்து, கொஞ்ச காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு வந்திருந்த அவரது மகன் கபுஸ் பின் சயித் (Qaboos bin Said) வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.
1970 ஆம் ஆண்டு வாக்கில் தன் தந்தையை வெளியேற்றிவிட்டு ஒமன் நாட்டின் சுல்தானாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1971 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஓமன், ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
புதிய தொடக்கம்:
ஓமன் நாட்டை உலகம் எந்த விஷயத்திற்காக உற்றுப் பார்த்ததோ, அதை மீண்டும் கையில் எடுத்தார் சுல்தான் கபுஸ். அப்போது ஓமன் நாட்டில் இருந்த கச்சா எண்ணெய் வளத்தை முறையாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஓமன் பொருளாதாரத்தையும் மேம்படுத்தினார்.
மக்களின் வாழ்க்கைத் தரம் கூடியது. சொல்லப்போனால் ஓமன் நாட்டில் சமூகம் மற்றும் கலாச்சார ரீதியில் பல மறுமலர்ச்சிகளை காண முடிந்தது. பள்ளிக்கூடங்கள் உட்பட பல கல்வி சாலைகள், மருத்துவமனைகள், ஒரு தேசத்திற்கு தேவையான சாலை போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என பலதும் மேம்படுத்தப்பட்டன.
மஸ்கட் மற்றும் ஓமன் என்று அழைக்கப்பட்ட பிரதேசம், இதே சுல்தான் கபூஸ் காலத்தில் தான் சுல்தனத் ஆஃப் ஓமன் (Sultanate of Oman) என்கிற இன்றைய பெயரைப் பெற்றது. 1970 ஆம் ஆண்டு அரியணை ஏரிய இவர் 2020 ஆம் ஆண்டு உயிரிழக்கும் வரை ஓமன் நாட்டின் சுல்தானாக சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
ஈரான் நாட்டோடு நட்பு பாராட்டிய சுல்தான் கபுஸ், அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளோடும் நட்பு பாராட்டினார். சொல்லப் போனால் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஒரு பாலமாகச் செயல்பட்டார் சுல்தான் கபுஸ்.
அவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் தன்னுடைய சகோதரர் ஹைத்தம் பின் தாரிக்கை சுல்தானாக அறிவித்தார். இப்போது ஹைத்தம் பின் தாரிக் தான் (Haitham Bin Tariq) ஓமனின் சுல்தானாக ஆட்சி செய்து வருகிறார்.
மதம்:
இன்று இஸ்லாமிய நாடாக இருக்கும் ஓமன், இஸ்லாத் என ஒரு புதிய மதம் உருவாதற்கு முன் இபாதிஸத்தைப் பின்பற்றி வந்ததாக சில வலைதளங்கள் சொல்கின்றன.
இஸ்லாத் அறிமுகமான போது அம்மதத்தை ஆறத் தழுவிக் கொண்டது ஓமன். இன்று ஓமன் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். இருப்பினும் ஒரு சிறிய எண்ணிக்கையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் அந்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஓமன் நாட்டு பொருளாதாரம்:
உலகிலேயே அமெரிக்க டாலரை விட சக்திவாய்ந்த வெகு சில கரன்சிகளில் ஓமானி ரியால் கரன்சியும் ஒன்று. ஓமன் நாட்டின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் & கச்சா எண்ணெய் சுத்திகரிப்புப் பொருட்கள், இயற்கை எரிவாயு போன்ற பொருட்கள் மட்டும் சுமார் 70 சதவீதத்துக்கு அதிகமாக பங்களிக்கிறது.
பல எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளைப் போல, தன் நாட்டு பொருளாதாரத்தையும் கச்சா எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களில் இருந்து பரவலாக்கும் முனைப்பில் பல திட்டங்கள் அறிவித்திருக்கிறது ஓமன்.
ஓமன் தாராளமயவாதத்தை ஆதரிக்கிறது. தன் நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பும் வழங்குவதாக சில வலைதளங்கள் சொல்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிப் பிடித்த நாடு என, கடந்த 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust