திரௌபதி முர்மு Twitter
இந்தியா

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் என்ன?

Antony Ajay R

இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவர் என்பது நாட்டின் மிகப் பெரிய பொறுப்பாகக் கருதப்படுகிறது.

இந்திய ஒன்றியத்தின் முழு நிறைவேற்று அதிகாரங்களையும் அவர்தான் கையில் வைத்திருக்கிறார். இதனை அவர் சுயமாகவோ தனக்குக் கீழ் உள்ளவர்கள் மூலமாகவோ பயன்படுத்த முடியும்.

இதனால் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார் குடியரசுத் தலைவர். அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பதே அவரது முக்கிய பொறுப்பு. அத்துடன் இராணுவத்தின் முப்படை முதன்மை தலைவராகவும் இருக்கிறார் அவர்.

பிரதமர் பதவி அதிக செல்வாக்கு வாய்ந்ததாக கருதப்படுவதனால் முதல் குடிமகனாகவும் நாட்டின் தலைவராகவும் இருக்கும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புகள் மற்றும் பொறுப்புகள் பற்றி அறியத் தவறுகிறோம். அவற்றை விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அரசு நிர்வாகத்தில் குடியரசுத் தலைவரின் பங்கு

அரசு எந்திரத்தை நிர்வகிப்பதில் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் இன்றியமையாதது. நாட்டின் தலைவராக இருக்கும் அவரது அதிகாரங்கள் விரிவான மற்றும் ஆழமான செயல்திறனைக் கொண்டிருக்கின்றன. அரசின் அனைத்து முடிவுகளும் அவரது பெயராலேயே எடுக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவரின் நியமன அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரைத் தேர்தலில் முன்னிறுத்துபவராக இருக்கும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரங்கள் அவருக்கு இருக்கிறது.

மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்கும் பொறுப்பும் குடியரசுத் தலைவருடையது. அவர், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், இந்தியத் தலைமை கணக்காயர், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவரின் இராணுவ அதிகாரங்கள்

கடற்படை, தரைப் படை, விமானப் படை ஆகியவற்றின் தலைவராகவும் குடியரசுத் தலைவர் திகழ்கிறார். நாட்டின் தலைவர் எனும் அடிப்படையில் அவர் இந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த முப்படைகளின் தளபதிகளை நியமிக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.பிற நாடுகளுடன் போரை அறிவிக்கவும் ஒப்பந்தத்தின் மூலம் நிறுத்திவைக்கவும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.

இராணுவத்தின் மீது குடியரசுத் தலைவர் நேரடியான அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும், நாடாளுமன்றம் தான் பாதுகாப்புத் துறையின் அதிகாரங்களை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

நாடாளுமன்றத்தின் மீது குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை மட்டுமின்றி குடியரசுத் தலைவரையும் தனது அங்கமாகக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் நியமனங்கள்

இரு அவைகளிலும் அவர் குறிப்பிட்ட உறுப்பினர்களை நியமிக்கிறார். மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 530 மாநில உறுப்பினர்களும் 20 யூனியன் பிரதேச உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர, இரண்டு உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

இதேப் போல மாநிலங்களவையிலும் 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

தீர்மானங்கள் நிறைவேற்றுதல்

சட்டமியற்றுவதிலும் விரிவான அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார் குடியரசுத் தலைவர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு தீர்மானமும் அவரது ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால், ஒரு மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்க மறுத்த பின்னரும் இரண்டாவது முறையாக அதனை திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலோ நாடாளுமன்றம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு சமர்பிக்கும் போது அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமை.

இது அரசியல் அமைப்பின் பிரிவு 111 -ல் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் பரிந்துரைகள்

புதிய மாநிலத்தை அங்கீகரிப்பது, மாநில எல்லைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்ற மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு பின் தான் இரண்டு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

வர்த்தகம் மற்றும் வர்த்தக சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் மாநில மசோதாக்களுக்கும் அவரது பரிந்துரைத் தேவை.

தவிர, நிதி மசோதா அவருடைய முன் பரிந்துரையுடன் தான் அறிமுகப்படுத்தப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரமும் அவருக்கு இருக்கிறது.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா?

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாடலாம் அல்லது செய்திகளை அனுப்பலாம். பொதுவாக நாடளுமன்ற உறுப்பினர்களுடன் கடுமையான கருத்துவேறுபாடு கொண்டிருந்தால் மட்டுமே இதைச் செய்வார்.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அல்லது ஏதேனும் ஒரு அவையை ஒத்திவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

மக்களைவையை கலைக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு, எடுத்துக்காட்டாக 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த போதும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவர் எளிதாக பயன்படுத்த முடியாது. இதற்கான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

அவசர நிலை

நாடு முழுவதுமோ அல்லது நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமோ அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது.

அவசரநிலை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் படி பிரகடனப்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 352

ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356

மாநில அரசுகளின் அடிப்படை செயல்பாடுகள் தோல்வியடைந்தால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்.

அரசியலைமைபுச் சட்டம் பிரிவு 360

நிதி நிலை அச்சுறுத்தல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்.

குடியரசுத் தலைவரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரங்கள்

நீதிமன்றத்தில் விதிக்கப்படும் தண்டனைகளை குறைக்கவோ அல்லது விடுவிக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் மக்களவை பெரும்பான்மையினரின் கருத்துக்களை குடியரசுத் தலைவர் பொருட்படுத்த தேவையில்லை.

அரசியலமைப்புச் சட்டம் 72வது பிரிவு குடியரசுத் தலைவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைக் கொடுக்கிறது.

குடியரசுத் தலைவர் சுயாதீனமான முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான சூழ்நிலைகளில், அவர் தனது நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்துகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?