அட்சயதிரிதியை News Sense
ஆன்மிகம்

அட்சயதிரிதியை சிறப்புகள்: செல்வமும் புண்ணியமும் பண்மடங்கு பெருகும் - பலராமர் ஜெயந்தி

ஆர்.ஜே. கிரேசி கோபால்.

அடடா அட்சயதிரிதியை

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் 2022ல் சித்திரை 20, மே மாதம் 3 -ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அட்சய திரிதியை வருகிறது.

அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காகப் பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது நன்மையையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. தான தர்மங்கள் செய்வதும் பலமடங்கு புண்ணியங்களைத்தரும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், தங்களால் இயன்ற அளவு உதவிகளைப் பொருளாகவோ, செயலாகவோ, உதவிகளாகவோ தானம், தர்மம், உதவிகள் என செய்திட, பல புண்ணிய பலன்கள் தரும்.

அட்சயதிரிதியை

அட்சயதிரிதியையும் வழிபாடும்

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ – இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுதல் சிறப்பு. பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் சொல்லி வழிபட வேண்டும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் , அருகம்புல், வில்வம், துளசி போன்றவற்றால் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

சிறப்புகள் வாய்ந்த அட்சய திரிதியை

பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தை பெற்ற தினம்.

  1. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை பொன் மழையாகப் பொழியச் செய்த நாள் தான் 'அட்சய திருதியை' ஆகும்.

  2. வட இந்தியாவில் இந்நாளை ”அகஜித்” என்பர்.

  3. ஸ்ரீ மகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

  4. இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலும் பலன் உண்டு என்கிறார் திருமூலர்.

அரிசி

வாங்க வேண்டியதும் கொடுக்க வேண்டியதும்

அட்சய திருதியை அன்று அரிசி, கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் நல்லதுதான். இவையும் லட்சுமி கடாட்சம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் தங்கம் எந்த வகையினாலும் கைகொடுக்கும், பிற்கால வாழ்க்கைக்கும் கைகொடுக்கும் என்பதால் சேமிப்பாக, முதலீடாகவும் வாங்குகின்றனர். இன்று டிஜிட்டல் தங்கங்களாக, தங்க பத்திரங்களாக, தங்கத்தில் ம்யூச்சுவல் பண்டுகளாக முதலீடு செய்கின்றனர்.

வழக்கமாக என்னவெல்லாம் தானம் செய்வோமோ அதைக் கூடுதல் சிறப்பாக இந்த நாளிலும் அவரவர்களால் இயன்ற அளவு தானமளிக்கலாம். விசிறி, தண்ணீர், ஆடை, துண்டு, தயிர்ச்சாதம், வயது முதிர்ந்தோருக்கு உங்களால் என்னவெல்லாம் முடியுமோ அத்தனை உதவிகளையும் அளிக்கலாம். அகால மரணம் ஏற்படாதிருக்க அரிசி-கோதுமை தானியங்களை அளிக்கலாம். என்றென்றும் நிம்மதியைப் பெறத் தண்ணீர் தானம் அளிக்கலாம். குடித்து முடித்த உடனே அந்த ஆத்மா அப்பாடா என உணர்வதை நாமும் உணர்ந்திருப்போம். நிச்சயம் நிறைவடைந்த அந்த ஆத்மாவும் நம்மை வாழ்த்தும்.

அட்சயதிரிதியை அஷ்டலட்சுமி

ஆண்டுக்கு 8 நாட்களே அஷ்டலட்சுமி அருள் தரும் வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். ஆண்டுக்கு 8 நாட்களே அஷ்டலட்சுமி அருள் தரும் வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது. வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார்.

பலராமர்

பலராமர் ஜெயந்தி

திருமால் எடுத்த அவதாரங்களுள் எட்டாவது அவதாரமான பலராமர் அவதாரத்திற்கென்று தனி வரலாறு ஏதுவும் இல்லை. கண்ணனின் சகோதரனாக பலராமர் வருவதால், கண்ணன் வரலாற்றிலேயே பலராமரின் புகழும் குறிப்பிடப்படுகிறது. இந்த அட்சய திரிதியை நாளன்று தான் பலராமர் அவதரித்தார்.

எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கம்சன் தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து வைத்தான். வரிசையாக பிறந்த ஆறு குழந்தைகளை கொன்றான்.

ஏழாவதாக கருவுற்றாள் தேவகி. மகாவிஷ்ணு தனது மாயை மூலம் கருவை தேவகி வயிற்றில் இருந்து, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணி வயிற்றுக்கு மாற்றினார். ரோகிணியை பாதுகாப்பாக ஆயர்பாடியில் நந்தகோபரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். கூடவே மாயை நந்தகோபரின் மனைவி யசோதாவின் வயிற்றில் கருவாகி உருவானாள்.

தேவகிக்கு ஏழாவதாக உருவான கரு கலைந்து போனதாக கம்சனிடம் கூறப்பட்டது. மீண்டும் எட்டாவதாக கர்ப்பமானாள் தேவகி. சில மாதங்களில் ஆயர்பாடியில் மறைந்திருந்த ரோகிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பலசாலி என்று பெயர் சொல்லும் வகையில் பலராமன் என்று பெயர் சூட்டினர். கிருஷ்ண ஜெயந்திக்கு சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ந்த பலராம அவதாரம் கண்ணனுக்கு உதவி செய்யவே நிகழ்ந்தது. பலபத்ரன், ப்ராலம்பக்னன், பலதேவன், அச்யுதக்ரஜன், காமபாலன், ஹலாயுதன், நீலாம்பரன், ரோகிணேயன், தாலங்கன், முசலிஹலி, சங்கர்ஷனன், க்ஷீரபாணி, காளிந்தி பேதனன், காளிந்தி ஹர்ஷணன், ஹல ப்ரித், லாங்கலி, குப்த சரன் போன்ற பெயர்கள் பலராமருக்கு உண்டு.

பலராமருக்கு வாருணியாகிய யமுனைச் செல்வி, இரண்டு நீல வஸ்திரங்களும், ஒரு பொன் மாலையையும் அளித்தாள். ஆகையால் இவருக்கு நீலாம்பரன் என்ற பெயரும் உண்டு. இவர் கலப்பையை ஆயுதமாகவும், பனையைக் கொடியாகவும் கொண்டவர். இவருக்கு ரேவதி, வாருணி என்று இரண்டு மனைவிகள் உண்டு.

கம்பர்

சங்க இலக்கியங்களில் பலராமர் :

இன்று தனியே பலராமருக்கென்று கோவில்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆதிகாலத்தில் தமிழ் நாடெங்கும் பலராமன் வழிபாடு இருந்ததை சங்க நூல்கள் மட்டும் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. பனைக்கொடியும் கலப்பையும் ஆயுதமாக கொண்டவர் பலராமர். இளங்கோவடிகள், கபிலர் என பலரும் பலரமாரை பற்றி பாடியுள்ளனர். இளங்கோவடிகள், பலராமனை வாலியோன் என்றே அழைத்துள்ளார். "வால்வளை மேனி வாலியோன்'' மேலும், பலராமனைப் புலவர்கள் பலர் "பால்நிற வண்ணன்' என்று பாடியுள்ளார். "வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடி பால்நிற வண்ணன்'' என்று முல்லைக்கலி 4-ஆவது பாடலில் கூறியுள்ளார்.

நற்றிணையில் 32-ஆவது பாடல் கபிலரால் பாடப்பட்டது. அப்பாடலில் முதலிரண்டு வரிகள் பலராமனையும், கண்ணனையும் எடுத்துக்காட்டாக சொல்லி பாடப்பட்டுள்ளது. இலக்கியங்களில் பனைக் கொடி உடையவன் - புறநா.56; முல்லைக்கலி- பா.4; நாஞ்சில் எனும் ஆயுதம் கலப்பையாகும் - பாலைக்கலி (36); கார்நாற்பது (19) காணமுடிகிறது. நீலமலை என்ற மலையிலிருந்து விழுகின்ற அருவியின் நிறம் வெண்மை. நீல நிறம் போன்றமலை என்பதால் ""மாயோன் அன்ன மால்வரை'' என்றும், வெண்மை நிறமுடைய அருவியை ""வாலியோனன்னன் வயங்கு வெள்ளருவி'' என்றும் கூறப்படுகிறது. இங்கு வாலியோன் என சொல்லப்படுவது வெண்மை நிறத்தை உடைய பலராமரையே. பரிபாடலில் உள்ள 15-ஆவது பாடலைப் பாடியவர் இளம் பெருவழுதியார் என்னும் புலவர் ஆவார். இவர் திருமாலிருஞ் சோலையில் கண்ணன், பலராமன் ஆகிய இருவருக்கும் கோயில்கள் இருந்தன என்பதை அவரின் பாடலில் குறிப்பிட்டுள்ளார். அட்சய திரிதியை அன்று அவதரித்த பலராமரை வணங்கி வரங்கள் பெற்று வாழ்வில் வளங்கள் பெறுவோம்.

“பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்” என்பது ரமணர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும். மகிழ்வித்து மகிழ்வோம். அனைவருக்கும் வளம் கொழிக்கட்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?