Sri Lanka  Facebook
தமிழ்நாடு

Morning News Tamil : இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை - என்ன நடந்தது?

இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

NewsSense Editorial Team

இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை!

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிபர் இல்லத்தை மக்கள் முற்றுகையிட முயன்றதால், அதிபர் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

பிரதமரைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் திமுக -வின் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காகச் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த திறப்பு விழாவுக்கு வருகை தர பிரதமர் மோடியைச் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது நீட் விவகாரம், இலங்கை மீனவர் பிரச்னை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 41 பக்க மனு அளித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஸ்டாலினை நேரில் வந்து சந்தித்திருக்கிறார். மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோரையும் சந்தித்தார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்! - உச்ச நீதிமன்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன் மீதான வழக்கில் உயர் நீதி மன்றம் இந்த உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதற்கான மேல் முறையீடு உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கின் தீர்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும் என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: கேரளாவில் இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கேரளாவில் இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்கிறது. அரசுப் பேருந்து உள்பட அனைத்துப் பேருந்துகளிலும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் கி.மீ. கட்டணம் 90 பைசாவில் இருந்து, ரூ.1 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சீனாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். இந்நிலையில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று பிரதமர் மோடியையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசுகிறார்.

அமெரிக்காமீது இம்ரான்கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதையொட்டி பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுமீது வருகிற 3-ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாயுள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராகச் செயல்படுவதாக அமெரிக்காமீது இம்ரான் கான் குற்றம் சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?