OTT 

 

Facebook

சினிமா

2021 Amazon prime, Netflix, Hotstar : ஓடிடியில் ஓடிய-ஓடாத படங்கள் - ஒரு முழுமையான பார்வை

வெற்றி

ஒரு சிறு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு உலகின் வேறொரு இடத்தில் மிகப் பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் என்பது தான் கேயாஸ் தியரி!! இன்றைய காலகட்டத்தில் இந்த தியரியை புரிந்து கொள்வது. மிகவும் எளிதுதான். சீனாவில் பிறந்த கோவிட் நம்மூரில் எத்தனையோ பேரை காவு வாங்கிவிட்டதே!!

இப்போதெல்லாம் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கருப்பட்டிக் காப்பி கடைகள் நிறைந்து வழிகின்றன.சுத்தமான நாட்டுப் பசு மாட்டுப் பால் வாங்கிறோம் என்று வீட்டுக்கு வீடு சொல்லத் தொடங்கிவிட்டார்கள். செக்கு எப்படி இருக்கும் என்று கூட பாத்திராத தலைமுறை நான்! இப்போது சென்னை நகரில் எத்தனை செக்குகள் இயங்குகின்றன தெரியுமா? செக்கில் அரைத்த எண்ணெய் பயன்படுத்தாதா வீடு உண்டா? இத்தனையும் ஜல்லிக் கட்டுப் போராட்டத்துக்குப் பின் நடந்த மாற்றங்கள் தானே? கருப்பட்டிக் காப்பி, நாட்டுப் பசு பால், செக்கு எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்? இங்குதான் கேயாஸ் தியரி உள்ளூர் அளவில் தன் வேலையைக் காட்டி இருக்கிறது.

Tamil Cinema

எதையோ எழுத நினைத்து எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கிறேன். நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். ஓடிடி என்ற வார்த்தைக்கு எத்தனை பேருக்கு அதன் விரிவாக்கம் தெரியும் என்று தெரியவில்லை. (Over the Top) அப்படியே தெரிந்தவர்களில் எத்தனை பேருக்கு அதற்கு அர்த்தம் புரியும் என்று தெரியவில்லை? ஆனால் இன்று ஓடிடித் தளம் என்று உச்சரிக்காத வாய்களை விரல்விட்டு (வாய்க்குள் அல்ல) எண்ணிவிடலாம். இந்த ஓடிடி இந்தியாவுக்குள் எப்போது வந்தது? தமிழ்நாட்டு மக்களை எப்போது தாக்கியது? இது எந்த நாட்டில் எப்போது எந்த வண்ணத்துப் பூச்சி தன் சிறகை அசைத்ததின் விளைவு என்று யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

ஐயோ இன்னமும் விஷயத்துக்கு வராமல் சுற்றிக் கொண்டே இருக்கிறேன். இப்போது உண்மையிலேயே நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். முதலாம் அலை கோவிட் பாதிப்பால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தது நாம் இதற்கு முன்பு பாத்திராத அனுபவித்திராத ஒரு விஷயம். தாயக் கட்டைகளும் கேரம் போர்ட்களும் தூசித் தட்டி எடுக்கப்பட்ட அதே வேளையில் பலரின் செல்பேசிகளிலும் மடிக்கணிணிகளிலும் இன்னும் சிலரது ஸ்மார்ட் டிவிகளிலும் அனுமதியின்றி உள்ளே நுழைந்ததுதான் ஓடிடித் தளங்கள்.

Theatre

முதலாம் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்ட தோடு படப்பிடிப்புகளும் சுத்தமாக நிறுத்தப்பட்டன. சீரியல்கள் ஓய்வெடுத்தன. கேடிவி டிஆர்பியில் முன்னிலையில் பிடித்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெறுத்தவர்கள் அல்லது அதற்கு மாற்று வேண்டும் என்று நினைத்தவர்களை ஓடிடித் தளங்கள் சுவீகரம் செய்து கொண்டன.

இந்தக் கட்டுரைக்கு இவ்ளோ பெரிய தொடக்கவுரை அல்லது அறிமுகவுரை தேவையா என்று நீங்கள் கதறுவது என் காதில் கேட்கிறது. சரி இந்த முறை உண்மைக்கும் உண்மையாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

2021 இல் நேடியாக ஓடிடித் தளங்களில் வெளியான படங்கள் வெப்சீரிஸ்களுக்கு வருகிறேன். முதலில் படங்கள். நம்மூர் சினிமா காரர்கள் ஒரு வகையில் ஆட்டு மந்தைகள். ஒரு பேய்ப்படம் ஹிட்டடித்து விட்டால் அடுத்த பத்து வருஷங்களுக்கு பேய்ப்படங்கள் வரிசை கட்டி நிற்கும் என்பதை நான் சொல்லித்தான் யாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒருவகையில் பெரும்பாலான தமிழ் சினிமா படைப்பாளிகள் ஆட்டு மந்தைகள்தான். ஓடிடித் தளம் வந்த போது, வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். தியேட்டர் ஓனர்கள் ஓடிடியைப் பார்த்து கடுஞ்சினம் கொண்டார்கள் என்றால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் படைப்பாளிகள் ஏன் ஓடிடியைப் பார்த்து டென்ஷன் ஆனார்கள்? தியேட்டரில் படம் பார்ப்பது போல வருமா என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள்.

ஆனால் அவர்கள் ஓடிடியை வெறுக்கக் காரணம் அது அல்ல காரணம்? தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனால்தான், அது திரைப்படம்!! தியேட்டருக்குள் எழும் கைதட்டல்கள்தான் நம்மை திரைப்படைப்பாளியாக அங்கீகரிக்கும் என்று தவறாக எண்ணினார்கள். ஓடிடித்தளங்களில் தங்கள் படங்கள் வெளியானால் அதற்குண்டான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயந்தார்கள். ஆனந்த விகடன் விகடன் விமர்சனமும் மதிப்பெண்ணும் கிடைக்காதே என்று விசனப்பட்டார்கள்

Lockdown

ஓடிடித் தளங்களை ஏதோ தொலைக்காட்சியின் இன்னொரு வடிவமாக குறைத்து மதிப்பிட்டார்கள். இதெல்லாம் முதல் அலையில் பார்க்க முடிந்தது. ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடத் தயங்கினார்கள். ஒரு அறிமுக இயக்குநர் தங்கள் படத்தின் போஸ்டரை ஊரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைப் பார்த்து சிலாகிக்கும் அந்த கணத்தை ஓடிடி தங்களுக்கு தராதே என்று மனதுக்குள் புழுங்கினார்கள்.

இரண்டாம் அலையில் அதாவது நாம் எடுத்துக் கொண்ட தலைப்பில் குறிப்பிட்டுள்ள 2021 ,இல் இந்த நினைப்பெல்லாம் தலைகீழாக மாறிப்போனது. ஏராளமான படங்கள் தியேட்டர் ரிலீஸ்க்காகக் காத்திருக்க முடியாமல் போனதால் ஓடிடியை நோக்கிப் படை எடுக்க ஆரம்பித்தன. முன்னணி பத்திரிகைகள் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு விமர்சனம் எழுதின. ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்களுக்கு சக்ஸஸ் பார்ட்டிகள் நடந்தன.

பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லாத மண்டேலா (நெட்ஃப்ளிக்ஸ்) படம், ஓடிடியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பத்திரிகைகள் இந்தப் படத்தை கொண்டாடின. இயக்குநர் பா.ரஞ்சித்தின் சார்பாட்டா பரம்பரைக்கு கிடைத்த வரவேற்பால் அந்தப் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆனதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. மீடியாக்கள் கொண்டாடின. டான்ஸிங் ரோஸ்க்கு கிடைத்த வரவேற்பு ஓடிடியைக் கண்டு பயந்த படைப்பாளிகளுக்கு புது தெம்பை அளித்தது. ஊரெங்கும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டன. வெற்றிப் பெற்ற படங்களுக்கு அதன் ரசிகர்களே முன்வந்து பேனர்களும் பிளக்ஸ்களும் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

Jaibhim

ஒரு நல்ல படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஏற்படுத்தும் தாக்கத்துக்கு எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை இதே ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன ஜெய் பீம்! தியேட்டர் ரிலீஸ் என்பது ஒரு திருவிழாவைப் போல் நடக்குமே அதை மிஸ் செய்கிறோமா என்று நினைத்தால் அந்தத் தடையையும் இந்தாண்டு கடந்து வந்துவிட்டது. ஜெய்பூம் படத்துக்கு

லிப்ட்

வினோதய சித்தம்

ஓ மணப்பெண்ணே

டிக்கிலோனா

ஏலே

டெடி

திட்டம் இரண்டு

ஜெகமே தந்திரம்

பூமிகா

துக்ளக் தர்பார்

லாபம்

உடன் பிறப்பே

பொன்மாணிக்கவேல்

தலைவி

கலாட்டா கல்யாணம் (இந்தியில் அட்ராங்கி ரே)

அனபெல் சேதுபதி

என்று வரிசை கட்டி பெரிய பட்ஜெட் படங்களும் தனுஷ் ஆர்யா சந்தானம் போன்ற பெரிய ஸ்டார் காஸ்ட் படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகின. அதில் ஜெய்பீம், சார்பாட்டா பரம்பரை, மண்டேலா ஆகின பெரும் வெற்றி பெற்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் ஜெகமே தந்திரம் மிகப்பெரிய ப்ளாப் ஆனது!! ஆண்டின் இறுதியில் வெளியான அட்ராங்கி ரே (இந்தி) தமிழில் கலாட்டா கல்யாணம் (ஹாட் ஸ்டார்) தனுஷின் நடிப்புக்காக கொண்டாடப்பட்டது. லாபம் துக்ளக் தர்பார் அனபெல் சேதுபதி என வரிசை கட்டி வந்த விஜய் சேதுபதியின் படங்கள் கவனம் ஈர்க்கவில்லை. இத்தனைக்கும் கடந்த ஆண்டு (2020 இல்) ஓடிடி தளங்களை எல்லோரும் பார்த்து பயந்து ஒதுங்கிய நேரத்தில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்த க/ பெ ரணசிங்கம் முக்கியப்படமாக இருந்தது.

2020 இல் நடிகர் சூர்யா தான் (பெரும் பொருட்செலவில்) தயாரித்து நடித்த சூரரைப் போற்று படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து பூனைக்கு மணி கட்டினார் என்றால் க/பெ ரணசிங்கம் மூலம் விஜய்சேதுபதியும் தன் பங்கக்கு மணி கட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் 2021 அவருக்கு கை கொடுக்கவில்லை. சரி பழைய கதையை விடுவோம்

Mirzapur

மீண்டும் 2021 க்கு வருவோம். ஓடிடி நுழைய ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்தியில் மிரட்டலான அசத்தலான வெப் சீரிஸ்கள் வரிசை கட்டத் தொடங்கிவிட்டன. முதலாம் அலையில (2020) Money heist சீரிஸ் பார்த்து வெறி ஏற்றிக் கொண்ட நம் ரசிகர்கள் தமிழிலும் அப்படியான படைப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு 2021 இல் பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்தது. மணி ரத்னம் தயாரித்த நவரசா (ஆந்தாலஜி) ஓடிடி பார்வையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளானது. ஏற்கெனவே 2020 இல் பாவக் கதைகள் (ஆந்தாலஜி) ஏற்படுத்திய காயத்தில் மீண்டும் வெந்நீரை ஊற்றியது போலிருந்தது இந்த நவரசா.

மிர்ஸாப்பூர், பாதாள் லோக் போன்ற இந்தி வெப்சீரிஸ்களை பார்த்து வியந்த நம் ரசிகர்களுக்கு தமிழ் படைப்பாளிகளால் சரியான தீனி போடமுடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஹாட் ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் (விகடன் தயாரிப்பு) தரமான நல்ல வெப்சீரிஸ்க்கான அனைத்து டெம்ப்ளேட்களுடன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சோனி லைவில் வெளியான சிவரஞ்சனியும் சில பெண்களும் வெப்சீரிஸின் நோக்கம் நன்றாக இருந்தாலும் அதரபழசான மேக்கிங்களால் பார்வையாளர்களின் பொறுமையை சோதித்து விட்டது! அதே போல லைவ் டெலிகாஸ்ட் என்றொரு வெப்சீரிஸ், ம்ஹூம் முடியல!!

மொத்தத்தில் 2021 இரண்டாம் அலையின் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் திண்டாடிய ஆஸ்பத்திரிகளை போல தமிழில் நல்ல வெப்சீரிஸ் மற்றும் ஆந்தாலஜியை காண முடியாமல் ரசிகர்கள் திணறித்தான் போனார்கள்.

வரும் ஆண்டில் இன்னும் தரமான சிறப்பான சம்பவங்களை ஓடிடியில் கண்டு களிப்போம் என்ற நம்பிக்கையுடன் முடித்துக் கொள்கிறேன்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?